Tuesday 18 September 2007

அனுப்பப் படாத கடிதங்களில் ஒன்று!



அன்புள்ள அம்மா,

உங்களை அம்மா என்று அழைப்பதா, இல்லை அத்தை என்று அழைப்பதா எனத் தெரியவில்லை, என்னவரின் அம்மா என்றாலும் நான் அம்மா என்றே அழைக்க விரும்புகிறேன். நானும் அவரும் சந்தித்துப் பழகி ஐந்து வருடங்கள் ஆன பிறகு இப்போது தான் உங்களுடன் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது அதுவும் இந்த கடிதம் மூலம் மட்டுமே!

இப்படி ஒரு நேரத்தில் கடிதங்களுக்கே உரிய நலம் விசாரிப்பு என்பது வெறும் பேச்சுக்காக மட்டுமே இருக்க முடியும், நீங்கள் நலமாக இல்லை என்பதை நன்கு அறிந்த நிலையில், அதற்கு காரணமாக நான் இருப்பதை நினைத்தால் என் மன வேதனை மேலும் அதிகரிக்கவே செய்கிறது. வாழ்க்கையில் பல தருணங்களில் கஷ்டங்களை மட்டுமே அனுபவித்து தனி மனுஷியாக தன் பிள்ளைகளை வளர்த்து முன்னுக்கு கொண்டு வந்திருக்கும் உங்கள் நம்பிக்கையும் போராட்ட குணமும் ஆச்சரியப்படக் கூடியவை.

நிம்மதியாக இருக்க வேண்டிய இந்த நேரத்தில், எங்களுடைய காதல் எந்த அளவுக்கு உங்கள் அமைதியை குலைத்திருக்கும் என்று என்னால் நினைத்துப் பார்க்க முடிகிறது. நீங்கள் என் மீது கொண்டுள்ள வெறுப்பும் கோபமும் எந்த அளவுக்கு நியாயம் என்பதையும் நான் புரிந்துக் கொள்ள தவறவில்லை. ஆனாலும் நான் என்னவரின் மீது கொண்டுள்ள காதலை உங்களுக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை. நீங்கள் விரும்பும் மகளாக/மருமகளாக வாழ்ந்து காட்ட முடியும் நீங்கள் வாய்ப்பளித்தால், ஆனால் சாதிக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும், காதலுக்கும் சத்தியத்துக்கும் இல்லை என்ற கசப்பான உண்மைக்குக் காரணம் என் துரதிஷ்டம் என்று சொல்வதை தவிர வேறு ஒன்றும் சொல்ல தோன்றவில்லை!

இருப்பினும் காலங்கள் மாறும், காதலை புரிந்து கொள்ளும் நல்ல நேரம் விரைவில் வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கத் தயாராகிறேன் உங்கள் சம்மதத்திற்க்காக. அதே சமயம் உங்களின் தற்காலிக மன வருத்தத்திற்க்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதோடு இந்த வருத்தம் நிரந்தரம் அல்ல என்பதால் கொஞ்சம் நிம்மதியும் அடைய முடிகிறது!!

என்றும் அன்புடன்
உங்களின் மகளாக விரும்பும்
அன்பு மருமகள்

Tuesday 28 August 2007

உயிரை மட்டுமாவது திருப்பி கொடு


உனக்காக காத்திருந்த ஒவ்வொரு வினாடியையும்
திருப்பிக் கேட்கவில்லை

பெற்றோரிடம் இழந்த நம்பிக்கையை
திருப்பிக் கேட்கவில்லை

இழந்த அன்பான உறவுகளை
திருப்பிக் கேட்கவில்லை

இழந்த இளமையை
திருப்பிக் கேட்கவில்லை

இழந்த தன்னம்பிக்கையை
திருப்பிக் கேட்கவில்லை

இழந்த சுயமரியாதையை
திருப்பிக் கேட்கவில்லை

இழந்த கனவுகளை
திருப்பிக் கேட்கவில்லை

இழந்த காதலை
திருப்பிக் கேட்கவில்லை

இழந்த சிரிப்பை
திருப்பிக் கேட்கவில்லை

உனக்குள் இருக்கும் என் உயிரை மட்டும் தான்
திரும்பக் கொடு என்கிறேன்!

நீயொ, கண்ணீர் மட்டும் தருகிறேன்,
காலம் முழுவதும் வைத்துக்கொள் என் நினைவாக என்கிறாய்!!

Tuesday 21 August 2007

கற்றுக் கொடுத்த அப்பா


நடை வண்டியில் நடைபயில கற்றுக் கொடுக்கையில்,
விழாமல் இருக்க அப்பாவின் கரம் அருகிலேயே

மூன்று சக்கர சைக்கிளில் தள்ளி விட்டுக் கொண்டே
பின்னால் நடந்து வரும் அப்பாவின் கால்கள்

இரு சக்கர சைக்கிள் பழகிக் கொடுக்க,
பின்னால் மூச்சிரைக்க ஓடி வரும் அப்பா

TVS-50 ஓட்டப் பழகும் போது தூரத்திலிருந்தே
கவனிக்கும் அப்பாவின் பயம் கலந்த பாசப் பார்வை

இன்று, பக்கத்து இருக்கையில் பெருமிதத்துடன் அப்பா
நான் காரில் அவரை ஏற்றிக் கொன்டு செல்கையில்

Tuesday 14 August 2007

அறுபது ஆண்டு சுதந்திரம்

பறைய ருக்கும் இங்கு தீயர்
புலைய ருக்கும் விடுதலை
பரவ ரோடு குறவருக்கும்
மறவ ருக்கும் விடுதலை!
திறமை கொண்டதீமை யற்ற
தொழில் புரங்ந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம்
எய்தி வாழ்வம் இந்த நாட்டிலே.

ஏழை யென்றும் அடிமையென்றும்
எவனும் இல்லை ஜாதியில்,
இழிவு கொண்ட மனித ரென்பது
இந்தி யாவில் இல்லையே
வாழி கல்வி செல்வம் எய்தி
மனம கிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் ஒருநிகர் கர்ச
மானமாக வாழ்வமே!

மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமை யைக்கொ ளுத்துவோம்
வைய வாழ்வு தன்னில் எந்த
வகையி னும்ந மக்குள்ளே
தாதர் என்ற நிலைமை மாறி
ஆண்க ளோடு பெண்களும்
சரிநி கர்ச மான மாக
வாழ்வம் இந்த நாட்டிலே.
--பாரதி

Monday 13 August 2007

நீ சொல்லும் வரை.......


மாமா மகனுக்கு கல்யாணம், பத்திரிக்கை கொடுத்து விட்டுக் கேட்டான்,
உங்களுக்கு எப்போது என்று!

பக்கத்து வீட்டுப் பையனின் திருமண ஆல்பத்தை பார்க்கும் போது கேட்டான்,
உங்களை இப்படி எப்போது பார்ப்பது என்று!

உடன் வேலை பார்க்கும் தோழி, மாப்பிள்ளையின் புகைபடத்தை காட்டி விட்டு கேட்டாள், உங்களவரை எப்போது காட்டப் போகிறீர்கள் என்று!

அண்ணி குழந்தைக்கு விளையாட்டு காட்டி சோறூட்டும் போது கேட்டாள்,
எப்போது என் மகனுக்கு பெண் பிள்ளை பெற்று தர போகிறீர்கள் என்று!

அக்கா மகனை தூங்க வைக்கும் போது, உன் பிள்ளையின் தொட்டிலை எப்போது ஆட்ட போகிறாய் என்றார் அக்காவின் கணவர்!

அமெரிக்காவில் வசிக்கும் அன்புத் தோழியிடம், எப்போது இந்தியா வருகிறாய் என்று கேட்டால், உன் திருமணத்திற்க்கு வருகிறேன் தேதியை சொல்லு என்கிறாள்!

எல்லாருக்கும் பதிலாக ஒரு சிறு புன்னகை மட்டும்!!!!!!

Tuesday 3 July 2007

உனக்கும் எனக்கும்



உன்னை எழுப்பிய சூரியன் தான்
என் பகலையும் எழுப்பிச் சென்றது

நீ கண்டு ரசித்த நிலவு தான்
என் வீட்டு ஜன்னலையும் எட்டிப் பார்த்துச் சென்றது

நீ எண்ண முயற்ச்சித்து தோற்றுப் போன நட்சத்திரங்களிடம் தான் நானும் தோற்றுப் போனேன்

உன்னை தினம் சுமக்கின்ற பூமி தான் என்னையும், என்னில் உள்ள உன்னையும் சேர்த்து சுமக்கின்றது

உனக்கு சுவாசம் கொடுத்த காற்று தான்
எனக்கும் கொடுத்துச் சென்றது

உன்னை தொட்டுச் சென்ற காதல் தான்
என்னையும் வருடிச் சென்றது

இவையனைத்தும் உனக்கும் எனக்கும் ஒன்றாய் இருக்க,
கல்யாணம் என்றதும் நீ மேல் சாதியானாய் நான் கீழ் சாதியானேன்!

Saturday 19 May 2007

காதலே உயிர் கொடு

என் வீட்டு ரோஜா பூத்து சிரித்த போது,
நான் கொண்ட காதலை சொல்லவில்லையா!

என் வீட்டு மாடியில் மேகங்கள் செதுக்கிய
சிற்பங்கள் சொல்லவில்லையா நான் கொண்ட காதலை!!

நான் சுவாசித்து விட்டுச் சென்ற காற்று,
என் மூச்சில் நீ இருப்பதை உணர்த்தவில்லையா!!!

இயற்க்கையின் மொழி கொண்டு காதல் அனுப்பியுள்ளேன்,
பதில் கொடுத்து விரைவில் உயிர் கொடு!!!!