Tuesday 18 September 2007

அனுப்பப் படாத கடிதங்களில் ஒன்று!



அன்புள்ள அம்மா,

உங்களை அம்மா என்று அழைப்பதா, இல்லை அத்தை என்று அழைப்பதா எனத் தெரியவில்லை, என்னவரின் அம்மா என்றாலும் நான் அம்மா என்றே அழைக்க விரும்புகிறேன். நானும் அவரும் சந்தித்துப் பழகி ஐந்து வருடங்கள் ஆன பிறகு இப்போது தான் உங்களுடன் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது அதுவும் இந்த கடிதம் மூலம் மட்டுமே!

இப்படி ஒரு நேரத்தில் கடிதங்களுக்கே உரிய நலம் விசாரிப்பு என்பது வெறும் பேச்சுக்காக மட்டுமே இருக்க முடியும், நீங்கள் நலமாக இல்லை என்பதை நன்கு அறிந்த நிலையில், அதற்கு காரணமாக நான் இருப்பதை நினைத்தால் என் மன வேதனை மேலும் அதிகரிக்கவே செய்கிறது. வாழ்க்கையில் பல தருணங்களில் கஷ்டங்களை மட்டுமே அனுபவித்து தனி மனுஷியாக தன் பிள்ளைகளை வளர்த்து முன்னுக்கு கொண்டு வந்திருக்கும் உங்கள் நம்பிக்கையும் போராட்ட குணமும் ஆச்சரியப்படக் கூடியவை.

நிம்மதியாக இருக்க வேண்டிய இந்த நேரத்தில், எங்களுடைய காதல் எந்த அளவுக்கு உங்கள் அமைதியை குலைத்திருக்கும் என்று என்னால் நினைத்துப் பார்க்க முடிகிறது. நீங்கள் என் மீது கொண்டுள்ள வெறுப்பும் கோபமும் எந்த அளவுக்கு நியாயம் என்பதையும் நான் புரிந்துக் கொள்ள தவறவில்லை. ஆனாலும் நான் என்னவரின் மீது கொண்டுள்ள காதலை உங்களுக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை. நீங்கள் விரும்பும் மகளாக/மருமகளாக வாழ்ந்து காட்ட முடியும் நீங்கள் வாய்ப்பளித்தால், ஆனால் சாதிக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும், காதலுக்கும் சத்தியத்துக்கும் இல்லை என்ற கசப்பான உண்மைக்குக் காரணம் என் துரதிஷ்டம் என்று சொல்வதை தவிர வேறு ஒன்றும் சொல்ல தோன்றவில்லை!

இருப்பினும் காலங்கள் மாறும், காதலை புரிந்து கொள்ளும் நல்ல நேரம் விரைவில் வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கத் தயாராகிறேன் உங்கள் சம்மதத்திற்க்காக. அதே சமயம் உங்களின் தற்காலிக மன வருத்தத்திற்க்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதோடு இந்த வருத்தம் நிரந்தரம் அல்ல என்பதால் கொஞ்சம் நிம்மதியும் அடைய முடிகிறது!!

என்றும் அன்புடன்
உங்களின் மகளாக விரும்பும்
அன்பு மருமகள்

Tuesday 28 August 2007

உயிரை மட்டுமாவது திருப்பி கொடு


உனக்காக காத்திருந்த ஒவ்வொரு வினாடியையும்
திருப்பிக் கேட்கவில்லை

பெற்றோரிடம் இழந்த நம்பிக்கையை
திருப்பிக் கேட்கவில்லை

இழந்த அன்பான உறவுகளை
திருப்பிக் கேட்கவில்லை

இழந்த இளமையை
திருப்பிக் கேட்கவில்லை

இழந்த தன்னம்பிக்கையை
திருப்பிக் கேட்கவில்லை

இழந்த சுயமரியாதையை
திருப்பிக் கேட்கவில்லை

இழந்த கனவுகளை
திருப்பிக் கேட்கவில்லை

இழந்த காதலை
திருப்பிக் கேட்கவில்லை

இழந்த சிரிப்பை
திருப்பிக் கேட்கவில்லை

உனக்குள் இருக்கும் என் உயிரை மட்டும் தான்
திரும்பக் கொடு என்கிறேன்!

நீயொ, கண்ணீர் மட்டும் தருகிறேன்,
காலம் முழுவதும் வைத்துக்கொள் என் நினைவாக என்கிறாய்!!

Tuesday 21 August 2007

கற்றுக் கொடுத்த அப்பா


நடை வண்டியில் நடைபயில கற்றுக் கொடுக்கையில்,
விழாமல் இருக்க அப்பாவின் கரம் அருகிலேயே

மூன்று சக்கர சைக்கிளில் தள்ளி விட்டுக் கொண்டே
பின்னால் நடந்து வரும் அப்பாவின் கால்கள்

இரு சக்கர சைக்கிள் பழகிக் கொடுக்க,
பின்னால் மூச்சிரைக்க ஓடி வரும் அப்பா

TVS-50 ஓட்டப் பழகும் போது தூரத்திலிருந்தே
கவனிக்கும் அப்பாவின் பயம் கலந்த பாசப் பார்வை

இன்று, பக்கத்து இருக்கையில் பெருமிதத்துடன் அப்பா
நான் காரில் அவரை ஏற்றிக் கொன்டு செல்கையில்

Tuesday 14 August 2007

அறுபது ஆண்டு சுதந்திரம்

பறைய ருக்கும் இங்கு தீயர்
புலைய ருக்கும் விடுதலை
பரவ ரோடு குறவருக்கும்
மறவ ருக்கும் விடுதலை!
திறமை கொண்டதீமை யற்ற
தொழில் புரங்ந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம்
எய்தி வாழ்வம் இந்த நாட்டிலே.

ஏழை யென்றும் அடிமையென்றும்
எவனும் இல்லை ஜாதியில்,
இழிவு கொண்ட மனித ரென்பது
இந்தி யாவில் இல்லையே
வாழி கல்வி செல்வம் எய்தி
மனம கிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் ஒருநிகர் கர்ச
மானமாக வாழ்வமே!

மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமை யைக்கொ ளுத்துவோம்
வைய வாழ்வு தன்னில் எந்த
வகையி னும்ந மக்குள்ளே
தாதர் என்ற நிலைமை மாறி
ஆண்க ளோடு பெண்களும்
சரிநி கர்ச மான மாக
வாழ்வம் இந்த நாட்டிலே.
--பாரதி

Monday 13 August 2007

நீ சொல்லும் வரை.......


மாமா மகனுக்கு கல்யாணம், பத்திரிக்கை கொடுத்து விட்டுக் கேட்டான்,
உங்களுக்கு எப்போது என்று!

பக்கத்து வீட்டுப் பையனின் திருமண ஆல்பத்தை பார்க்கும் போது கேட்டான்,
உங்களை இப்படி எப்போது பார்ப்பது என்று!

உடன் வேலை பார்க்கும் தோழி, மாப்பிள்ளையின் புகைபடத்தை காட்டி விட்டு கேட்டாள், உங்களவரை எப்போது காட்டப் போகிறீர்கள் என்று!

அண்ணி குழந்தைக்கு விளையாட்டு காட்டி சோறூட்டும் போது கேட்டாள்,
எப்போது என் மகனுக்கு பெண் பிள்ளை பெற்று தர போகிறீர்கள் என்று!

அக்கா மகனை தூங்க வைக்கும் போது, உன் பிள்ளையின் தொட்டிலை எப்போது ஆட்ட போகிறாய் என்றார் அக்காவின் கணவர்!

அமெரிக்காவில் வசிக்கும் அன்புத் தோழியிடம், எப்போது இந்தியா வருகிறாய் என்று கேட்டால், உன் திருமணத்திற்க்கு வருகிறேன் தேதியை சொல்லு என்கிறாள்!

எல்லாருக்கும் பதிலாக ஒரு சிறு புன்னகை மட்டும்!!!!!!

Tuesday 3 July 2007

உனக்கும் எனக்கும்



உன்னை எழுப்பிய சூரியன் தான்
என் பகலையும் எழுப்பிச் சென்றது

நீ கண்டு ரசித்த நிலவு தான்
என் வீட்டு ஜன்னலையும் எட்டிப் பார்த்துச் சென்றது

நீ எண்ண முயற்ச்சித்து தோற்றுப் போன நட்சத்திரங்களிடம் தான் நானும் தோற்றுப் போனேன்

உன்னை தினம் சுமக்கின்ற பூமி தான் என்னையும், என்னில் உள்ள உன்னையும் சேர்த்து சுமக்கின்றது

உனக்கு சுவாசம் கொடுத்த காற்று தான்
எனக்கும் கொடுத்துச் சென்றது

உன்னை தொட்டுச் சென்ற காதல் தான்
என்னையும் வருடிச் சென்றது

இவையனைத்தும் உனக்கும் எனக்கும் ஒன்றாய் இருக்க,
கல்யாணம் என்றதும் நீ மேல் சாதியானாய் நான் கீழ் சாதியானேன்!

Saturday 19 May 2007

காதலே உயிர் கொடு

என் வீட்டு ரோஜா பூத்து சிரித்த போது,
நான் கொண்ட காதலை சொல்லவில்லையா!

என் வீட்டு மாடியில் மேகங்கள் செதுக்கிய
சிற்பங்கள் சொல்லவில்லையா நான் கொண்ட காதலை!!

நான் சுவாசித்து விட்டுச் சென்ற காற்று,
என் மூச்சில் நீ இருப்பதை உணர்த்தவில்லையா!!!

இயற்க்கையின் மொழி கொண்டு காதல் அனுப்பியுள்ளேன்,
பதில் கொடுத்து விரைவில் உயிர் கொடு!!!!

Wednesday 2 May 2007

மெளனம் கலைத்த "மொழி"

வாழ்க்கையில எத்தனையோ பேர் வாழ பிடிக்காம
தற்கொலை பண்ணிட்டு செத்து போயிடராங்க, ஆனா
நீ ஒருத்தி தான் வாழ்க்கையே கொன்னுட்டு வாழ்ந்திட்டு இருக்க
................................................................

"வாழனும்கிற தவிப்பு உன் கண்ணுல தெரியுது, ஏன் மறைக்கிற
வாழ்ந்து தான் பாரேன்டீ, நிச்சயம் தோக்க மாட்ட........ "

வாழ்க்கையில சில விஷயங்கள கேள்வி கேக்காம நம்பி தான் ஆகனும்,
நீ எடுத்த முடிவு தப்புனு புரியும் போது அத திருத்திக்கிற
வாய்ப்பு கிடைக்காமலே போய்டலாம்.

இசையை எந்த அளவுக்கு நேசிச்சேனோ அந்த அளவுக்கு
உன் மெளனத்தையும் நேசிச்சேன்.

இதுக்கும் மேல நான் என்ன சொல்றது !!!!!!!

Monday 2 April 2007

இன்னும் நம்புகிறேன்.............


காட்டாற்று வெள்ளம் தலை தடவிய போதும்
கரையேறி விடுவேன் என்று இன்னும் நம்புகிறேன்!!

ஆசை என்னவோ ஆல விருட்சம் போல் என்றாலும்
ஒரு சின்ன விதையை இன்னும் நம்புகிறேன்!!

நேசித்து நேசித்து இழந்த நெஞ்சங்களை
மீண்டும் பெறுவேன் என்று இன்னும் நம்புகிறேன்!!!

Thursday 1 February 2007

கனவு காண்கிறேன்

சாதிகள் இல்லையடி பாப்பா,
குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

பாரதியே நீ அன்று கண்ட கனவு
இன்றும் கனவாகவே.........

நீ கண்ட புதுமை பெண்ணாய், நானும் கனவு காண்கிறேன்,
என்றாவது ஒரு நாள் நிஜமாகும் என்ற நம்பிக்கையில்!!!!

கனவுகள் நிஜமாகும் நாளில் நான் இல்லாமல் போனாலும்,
சாதியற்ற மனிதகுலம் உமக்கு சாட்சி சொல்லும்.

Wednesday 24 January 2007

நிராகரிக்கப்படுதலின் வலி

நான் இன்று காலை அலுவலுகத்திற்கு பேருந்தில் வந்து கொண்டிருக்கும் போது, என் அருகில் ஒரு பெண் செல்பேசியில் யாருடனோ பேசிக் கொண்டே வந்தார். சிறிது நேரம் அந்த உரையாடலை கவனிக்காமல் வந்து கொண்டிருந்தேன், ஆனால் அந்த பெண்ணின் விசும்பல் சத்தம் அந்த உரையாடலை கவனிக்க வைத்தது. அந்த பெண் தனது நண்பனை பற்றி அவனுடைய அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்பெண் பேசிய வார்த்தைகள் பின்வருமாறு

"இப்பெல்லாம் என்னை அவன் வெறுக்க ஆரம்பித்து விட்டான், நான் செல்பேசியில் அழைத்தால், அழைப்பை துண்டித்து விடுகிறான், அப்படியே அழைப்பை எடுத்தாலும் சரியாக என்னுடன் பேசுவதில்லை. முன்பெல்லாம் அதிக நேரம் என்னுடன் பேசுவான், எல்லா விஷயங்களையும் பற்றி இரவு வெகு நேரம் வரை பேசிக் கொண்டிருப்போம், ஆனால் திடீரென்று அவனுக்கு என்ன ஆச்சுன்னு புரியல, கொஞ்ச நாளாவே என்னை புறக்கணிக்க ஆரம்பித்து விட்டான், நானும் அவனுக்கு எதோ பிரச்சனை அதனால் தான் அப்படி இருக்கிறான், சிறிது காலத்தில் சரியாகி விடும் என்று நினைத்தேன், ஆனால் நேற்று என்னுடைய பிறந்த நாள் என்று தெரிந்தும் கூட எனக்கு வாழ்த்துச் சொல்லவில்லை. நானும் இரவு வெகு நேரம் வரை அவனுடைய தொலைபேசி அழைப்பு வரும் என்று காத்திருந்தேன், ஆனால் கடைசி வரை அவன் அழைக்கவேயில்லை. நேற்று இரவு முழுவதும் அழுது கொண்டேயிருந்தேன். அப்படி பெரிதாக எங்களுக்குள் சண்டை எதுவும் நடக்கவில்லை, அப்படியே இருந்தாலும் கோவம் இன்னைக்கு வரும், நாளைக்கு வரும், ஆனால் என் பிறந்த நாள் வருடத்தில் ஒரு முறை தானே வருகிறது, அன்று கூட அவன் என்னை இப்படி அழ வைக்கனுமா. நீங்களாவது அவனிடம் அவனுக்கு என்ன பிரச்சனை என்று பேசுங்க"

இதே உரையாடலை நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு முன்பு நான் கேட்டிருந்தால், இந்த அளவுக்கு என்னை பாதித்திருக்காது என்று நினைக்கிறேன். முன்பெல்லாம் யாராவது இப்படி பேசுவதை நான் கேட்க நேர்ந்திருந்தால், அவங்களுக்கு கொஞ்சம் அறிவுரை சொல்லிட்டு வந்திருப்பேன், நீங்க ஏன் இப்படி அவங்களுக்காக அழுதிட்டு இருக்கீங்கன்னு, முடிஞ்சா கொஞ்சம் திட்டிட்டு வந்திருப்பேன். ஆனால் இப்பெல்லாம் அதன் வலியை புரிந்துகொள்ள முடிகிறது. காதல் கற்றுக் கொடுத்த பாடங்களில் இதுவும் ஒன்று. அன்புக்குரியவர்களால் நிராகரிக்கப்பட்டால் எந்த அளவுக்கு வலிக்கிறதோ, அதை விட பல மடங்கு நம்மால் திருப்பி அன்பு செலுத்தவும் முடிகிறது. எல்லாரும் ஒரு முறையாவது யாராவது ஒருவரால் குறைந்த பட்சம் ஒரு சில மணித்துளிகளாவது நிராகரிக்கப்பட்டிருப்பார்கள் என்று நான் கருதுகிறேன். அதே நேரத்தில் நம்மாலும் யாரோ ஒருவர் எதாவது ஒரு சில சமயங்களில் நிராகரிக்கப்பட்டிருப்பார்கள் என்பதையும் நினைத்து பார்க்க முடிகிறது.

அப்பெண் நிராகரிக்கபட்ட மன வருத்ததில் இருந்தால் கூட, அவனுக்கு ஏதாவது பிரச்சனையா இருக்கும் என்று நினைத்து தான் அதிகம் வருத்தப்பட்ட மாதிரி தெரிந்தது. இந்த பெண்மையின் பெருமையை என்ன என்று சொல்வது !!!!

Tuesday 23 January 2007

தொலைத்த உறவுகளில் ஒன்று!!!!!

நம் வாழ்க்கையில் எத்தனையோ பேர் வந்து போவதுண்டு, ஆனால் அனைவருமே நம் வாழ்க்கையின் அங்கமாகிவிடுவது இல்லை. சில பேர் விளிம்பில் இருந்து எட்டி பார்த்துவிட்டு சென்று விடுவர், சிலர் கொஞ்ச காலம் நினைவில் இருப்பர், வெகு சிலர் மட்டுமே நம் வாழ்க்கையில் நீங்கா இடம் பிடித்து சென்று விடுவர். நான் இப்போது சொல்லவிருக்கும் இந்த உறவை மேற்சொன்ன எந்த வகுப்பில் சேர்ப்பது என்று எனக்குத் தெரியவில்லை.

நான் பள்ளியில் படித்துக் கொண்டு இருக்கும் போது, எனது பெரியம்மா மகனும் எங்கள் வீட்டிலிருந்து கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தார். நான், என் அண்ணன், என் அக்கா மூவருமே அவருடன் பேசுவதற்க்கே பயப்படுவோம். அவர் எங்கள் வீட்டில் தங்கி இருந்த காலங்களில், "அண்ணா, அம்மா உங்கள சாப்பிட கூப்பிடறாங்க....." என்ற வார்த்தைகள் மட்டுமே நான் அவருடன் பேசி இருப்பேன் என்று நினைக்கிறேன்.

அவரை பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவரது குடும்பத்தை பற்றியும் கொஞ்சம் சொல்ல வேன்டும். எனது பெரியம்மாவும் பெரியப்பாவும் சென்னையில் வசித்து வந்தார்கள், பெண் குழந்தைக்கு ஆசைப்பட்டே நான்கு மகன்களை பெற்றெடுத்த பெரிய குடும்பம். அவர்கள் வீட்டில் பெண் இல்லை என்பதாலோ என்னவோ என் சகோதரி மீதும் என் மீதும் மிகவும் பாசமாக இருப்பார்கள் அந்த நான்கு அண்ணன்களும். இதில் நான் இன்னும் கொஞ்சம் special கடைக்குட்டி என்பதால். ஆனால் இரண்டாவது அண்ணன் மட்டும் எங்களுடன் சரியா பேச மாட்டார். அதற்க்கும் ஒரு காரனம் உண்டு, அவர் கொஞ்சம் சரியாக படிக்கமாட்டார் என்பதால் அவர் வீட்டில் அவர் மீது கொஞ்சம் பாரபட்சம் காட்டுகிறார்கள் என்று அவருக்கு நினைப்பு, அது ஓரளவுக்கு உண்மையும் கூட. அதனால் தான் என்னவோ எங்களுடன் கலகலப்பாக பேச மாட்டார்.

அவர் பத்தாம் வகுப்பில் இரண்டுமுறை தோல்வியடைந்து வீட்டில் மனமொடிந்து இருந்தார். அப்போது தான் என் அப்பா அவரை எங்கள் வீட்டிற்க்கு அழைந்து வந்தார். என் அப்பாவை பற்றி சொல்வதற்க்கு தனியா ஒரு பதிவே போடலாம். பெண் குழந்தைகளுக்கு அப்பா தான் முதன் முதல் பரீட்ச்சைமயமாகும் ஆண் என்று சொல்லலாம். அதனால் தான் என்னவோ எல்லாரை போலவும் என் அப்பாவும் எனக்கு ஒரு Hero போன்று தான் நினைக்க தோன்றும். அவரை குறித்து நான் இன்னும் ஆச்சரியப்படும் விஷயங்கள் நிறைய உண்டு. அதில் ஒன்று அவருக்கு படிப்பதிலும் மற்றும் படிக்கவைப்பதிலும் உள்ள ஆர்வம். அந்த ஆர்வத்தினால் பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்த என் cousin brother-யை எங்க வீட்டுக்கு கூட்டி வந்திருந்தார்.

என் அப்பா அவருக்கு கொடுத்த ஊக்கத்திற்க்கும் உற்ச்சாகத்திற்க்கும் அளவே இல்லைனு சொல்லலாம். அவரோடு இரவும் பகலும் கூடவேயிருந்து படிக்க வைப்பார். flask-ல் தேனீர் போட்டு வைத்துக்கொள்வார் தூக்கம் வராமல் இருக்க. சில சமயம் பொறுமையாக சொல்லி கொடுப்பார், சில சமயம் கோவம் வந்து அடித்து விடுவார். அவருக்கே அந்த நிலைமை என்றால், எங்க மூவருடைய நிலைமை உங்களுக்கே புரிஞ்சிருக்கும். என் அக்காவும், என் அண்ணனும் படிப்பிற்க்காக என் அப்பாவிடம் வாங்கிய அடிகளை கணக்கிட முடியாது. இதில் நான் கொஞ்சம் விதி விலக்கு, படிக்காவிட்டாலும் கடைசி இரவிலாவது படித்து மதிப்பெண் வாங்கி விடுவதால் அடியிலிருந்து தப்பித்து விடுவேன் :).

சரி, என் cousin brother கதைக்கு வருவோம், அவர் பத்தாம் வகுப்பில் 70% மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்தது, அனைவருக்கு மட்டுமில்லாமல் அவருக்கே ஆச்சரியமான உண்மை. என் அப்பா அடைந்த பெருமைக்கு அளவே இல்லை போங்க. அவர் எங்களோட வீட்டில் இருந்தே தொடர்ந்து படிக்க வேண்டும் என்று விரும்பியதால், எங்க ஊரிலேயே டிப்ளமோ சேர்ந்து படிப்பை தொடர்ந்தார்.

அவர் சென்னையில் இருந்து வந்ததாலோ என்னவோ அவருக்கு எங்க ஊரில் நிறைய fans, பந்தாவாக உடை உடுத்துவார், நல்ல shoe போடுவார். இதற்க்கெல்லாம் மயங்கி அவருக்கு காதல் வலை விரித்த பெண்களும் உண்டு :). ஆனால் அவர் படித்து தன் சகோதரர்களை விட விரைவில் முன்னேற வேண்டும் என்று வெறியோடு இருந்தார். ஆனாலும் காதலை எவ்வளவு காலம் தான் மறைத்து வைக்க முடியும். என் அக்காவின் தோழி ஒருவர் எங்கள் வீட்டிற்க்கு அடிக்கடி வருவார் என் அக்காவுடன் சேர்ந்து படிக்க என்று சொல்லிக்கொண்டு. நான் அப்போது சின்ன பெண் என்பதால் படிக்க தான் வருகிறார்கள் என்று நானும் நம்பிய காலம் அது. அவர்களுக்குள் காதல் இருந்ததே அவர்களுக்கு காதல் தூதுவாக இருந்த என் அக்கா பிற்காலத்தில் சொல்லி தான் எனக்கு தெரியும் :).

எனக்கு என் அப்பா Hero போல என்றால் என் cousin brother-க்கோ கடவுள் போல, இன்று வரை அப்படித்தான் எல்லாரிடமும் சொல்லுவார், என் அப்பாவுக்கு இவர் தான் வலதுகை போன்று. என் அப்பாவுக்கு ஒரு பழக்கம் உண்டு, வீட்டிலுள்ள பொருட்களை எல்லாம் வாரத்திற்க்கு ஒரு முறை மாற்றி வைத்துக்கொண்டே இருப்பார். என் அம்மா என் அப்பாவுக்கு வைத்திருக்கும் பேரே "துக்ளக்" என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் அவர் எத்தனை தடவை மாற்றிக்கொண்டே இருப்பார் என்று. அதற்கு ஒரு நல்ல காரணமும் சொல்லுவார், அதாவது வீடு சுத்தமாகும், அதோடு மாற்றம் இருந்தால் மனசுக்கும் நல்லா இருக்கும்னு சொல்லுவார். அதுவும் சரி தானே!!!......பொருட்களை மாற்றி வைப்பதற்க்கு பெரிதும் உதவியாக இருப்பது என் cousin brother தான். அதோடு என் அப்பாவுக்கு விபத்து நடந்து மூன்று மாதங்கள் படுக்கையிலிருந்த போதும் அவர் தான் முழுவதும் பார்த்துக் கொண்டார்.

என் அக்கா காதல் தூதுவாக இருந்ததாலோ என்னவோ என் அக்காவுடனும் நன்றாக பேச ஆரம்பித்து விட்டார் என் cousin brother. ஆனால் எனக்கும் அவருக்கும் எப்போதும் ஒரு பெரிய இடைவெளி இருந்துகொண்டே இருந்தது. அவர் படிப்பும் நல்ல படியாகவே போய்க்கொண்டு இருந்தது. அவர் படிப்பு முடிந்து சென்னை போனவுடன் அவர் காதலும் தொடர்பில்லாமல் போய்விட்டது :( . இதற்கு ஒரு வகையில் என் அப்பாவின் சதியும் காரணம் என்று கேள்விபட்டேன், ஆனால் என் அப்பாவை Hero-வாக மட்டுமே பார்த்த எனக்கு காதலுக்கு மட்டும் வில்லனாக கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை, அதனாலேயே ஏன் பிரிந்தார்கள் என்ற ஆராய்ச்சியை தொடரவில்லை.

அவர் சென்னையில் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார், அதோடு வெளிநாடு செல்வதற்க்கும் முயற்சி செய்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் தான் நான் சென்னைக்கு engineering படிக்க வந்தேன். நான் கல்லூரியின் விடுதியிலேயே தங்கி படிக்க ஆரம்பித்தேன், எனது cousin brothers வாரத்தில் குறைந்தது இரு முறையாவது என்னை பர்க்க வந்து விடுவார்கள், அதோடு நானும் வாரக் கடைசியில் பெரியம்மா வீட்டிற்க்கு சென்று விடுவேன். எங்க வீட்டில் முன்பு தங்கி இருந்த அண்ணனும் என் கூட நன்றாக பேச ஆரம்பித்திருந்தார். அவருக்கு எனது கல்லூரி தோழியினர் வைத்த பேரே "பாச மலர்" என்றால் அவர் எந்த அளவுக்கு என் மேல் பிரியமுடன் இருந்திருப்பார் என்று பாருங்கள்....

அவரின் அளவு கடந்த அன்பு எந்த அளவுக்கு நன்றாக இருந்ததோ அதை விட தொல்லையாகவும் இருந்தது என்பதே உண்மை. அவருடைய அன்பு possessiveness-ஆக மாறி இருந்தது. வேற அண்ணன்களுடன் அதிக நேரம் நான் பேசி விட்டால் அவருக்கு கோவம் வந்து விடும், அதே மாதிரி கல்லூரியிலும் தோழிகளிடம் வெளியில் செல்லக் கூடாது என்று சொல்ல ஆரம்பித்தார். கல்லூரி வாழ்க்கையை முழுவதும் சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் என்று இருந்த எனக்கோ இது மாதிரியான கட்டுப்பாடுகளை உடைத்து எரிந்து வருவது கடினமான ஒன்றாக அப்போது தோன்றவில்லை. எனது அம்மா அப்பா எனக்கு கொடுத்திருந்த சுதந்திரமும் அதற்கு உதவியாக இருந்தது. இதனால் எனக்கும் அவருக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.....

நான் கல்லூரி வாழ்க்கையின் கடைசி ஆண்டில் இருந்தேன், எல்லாருக்கும் campus interview-வில் வேலை கிடைத்து விட்டது எனக்கு மட்டும் கிடைக்கவில்லை. என்னோட ஆங்கில அறிவை பற்றி முந்தைய பதிவுகளை படித்து இருந்தால் உங்களுக்கு தெளிவாக புரியும் எனக்கு ஏன் campus interview-வில் வேலை கிடைக்கவில்லை என்று :). அந்த காலம் மிகவும் கொடுமையான காலம், அதை எப்படி கடந்தேன் என்பது இன்று வரை எனக்கு ஆச்சரியம் தான். campus interview-வில் வேலை கிடைக்காததினால் வேறு ஒரு சின்ன நிறுவனத்தில் சேர போகிறேன், அங்கு தான் என் அருமை வாழ்க்கை துணையை சந்திக்க போகிறேன் என்று அப்போதே யாராவது சொல்லி இருந்தால் அழுது அழுது இரவுகளை கழித்திருக்க தேவையில்லை......

நான் கல்லூரி முடித்து வெளியில் வந்தவுடன் என் cousin brother வெளிநாடு சென்றுவிட்டார். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது, அப்பாடா அவர் தொல்லை இனி இல்லை என்று. ஆனால் என் கவனம் முழுவதும் வேலை வாங்க வேண்டும் என்பதிலேயே இருந்தது....எப்படியோ திக்கு முக்காடி எனக்கும் ஒரு சின்ன நிறுவனத்தில் வேலை கொடுத்து விட்டார்கள் :). அன்று தான் என் வாழ்க்கையின் பொன்னான நாட்களில் ஒன்று.... எல்லாருக்கும் அப்படி தான் என்று நினைக்கிறேன்.

காதல் என்னை மட்டும் விட்டு வைத்ததா என்ன, வாழ்க்கையில் உண்மையான சந்தோஷம், கஷ்டம் இரண்டையும் அனுபவிக்க விரும்பினால் காதல் பிரதான வழிகளில் ஒன்று :) அதற்கு பிறகு Hero-ஆக இருந்த என் அப்பா என் காதலுக்கு வில்லனாக மாறி இருந்த காலம். வேதனைகளுக்கு நடுவில் நான் சிரிக்க கற்றுக் கொண்ட காலம் என்றும் சொல்லலாம். அந்த சமயத்தில் தான் என் வெளிநாட்டு cousin brother-க்கு திருமணம் நிச்சயமாகியிருந்தது. அவர் திருமணத்திற்க்காக சென்னை வந்திருந்தார். மணப்பெண்ணுக்கு புடவையிலிருந்து மோதிரம் வரை என்னை தான் தேர்ந்தெடுக்கச் சொன்னார். என் காதல் பற்றி அவருக்கு தெரிந்தால் என்ன எல்லாம் நடக்கும் என்று உள்ளுக்குள் ஒரு பயம் இருந்தாலும், அவரே காதலித்தவர் தானே, என் காதலை மட்டும் எதிர்க்கவா போகிறார் என்று ஒரு சின்ன நம்பிக்கையும் இருந்தது. என் அம்மாவோ எப்படா அவரிடம் சொல்ல சந்தர்ப்பம் கிடைக்கும் என்று காத்துக்கொண்டிருந்தார். காதலின் சக்தி தெரியாமல், அவர் ஏதோ என்னை திருத்திவிடுவார் என்று என் அம்மாவின் நம்பிக்கை.

அதற்குள் நானே சொல்லலாம் என்றால், கல்யாண நேரத்தில் அவரை வருத்தப்படுத்த வேண்டாம் என்றும் கல்யாணம் முடிந்து சொல்லிவிடலாம் என்றும் நினைத்திருந்தேன். திருமணமும் நல்லபடியா முடிந்தது, அதற்கு பிறகு அவர் மனைவியுடன் கூடவே இருந்ததால் சொல்ல சந்தர்ப்பம் கிடைக்கவே இல்லை. நானும் வேலைக்கு திரும்பி விட்டேன். என் அம்மாவும் கல்யாணம் முடிந்து சொல்லலாம் என்று நினைத்திருப்பார் போல, எனக்கு கிடைக்காத சந்தர்ப்பம் என் அம்மாவுக்கு எப்படியோ கிடைத்துவிட்டது. நான் அடுத்த முறை அவரிடம் தொலைபேசியில் பேசும் போதே தெரிந்துவிட்டது அவர் என் அம்மா அப்பாவை விட பெரிய வில்லனாக மாறியிருந்தது :(

நான் அவரை நேரில் சந்தித்து எவ்வளவோ பேசியும் அவர் சமாதானம் ஆகவேயில்லை, பதிலுக்கு நான் தான் அவர் பேசிய பேச்சுக்களை கேட்க சக்தியில்லாதவளாய் திரும்பினேன். அன்று அவர் என் கூட பேசுவதை நிறுத்தியது தான், இன்றோடு கிட்டதட்ட 5 வருடங்கள் ஆகி விட்டது நான் அவருடன் பேசி. இடையில் அவரை சந்திக்கும் போதெல்லாம் சமாதானத்திற்கு முயற்சி செய்தும் முடியவில்லை. சில காலங்களுக்குப் பிறகு சமாதானம் செய்வதையும் நிறுத்திவிட்டேன். என் அம்மாவும் அப்பாவும் சமாதானம் ஆகியும் கூட அவர் சமாதானம் ஆகவில்லை என்பது எனக்கு இன்று வரை அதிசயமாக உள்ளது. அவர் என் மீது அன்பு செலுத்திய நாட்களில் நானே அந்த அன்பு இந்த அளவுக்கு வேன்டாம் என்று நினைத்தது உண்டு, ஆனால் அது சாதாரணமாக நடந்திருந்தால் வருத்தமாக இருக்காது, நம் மேல் உள்ள வெறுப்பு மற்றும் கோவத்தினால் விலகி செல்வது என்பது யாராக இருந்தாலும் கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இது சரி செய்ய முடியாத உறவாக மாறி விட்டது என்பதே கசப்பான உண்மை!!!!!!!!!!!!

Monday 22 January 2007

உன்னில் என்னை தேடுகிறேன்

உன் கேள்விகளுக்கு பதில் தேடுகிறாய்,
அந்த பதிலுக்குள் நான் என்னை தேடுகிறேன்!!!

Friday 12 January 2007

தை பிறந்தால் வழி பிறக்கும்

செழிப்பின் பானை பொங்கி வழிய, இனிப்பான பொங்கலும், மஞ்சள் மணமும், கரும்பின் சுவையும் மங்காத மகிழ்ச்சியை நம் இல்லங்களில் சேர்க்க என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்


Monday 1 January 2007

Mind the Gap........

நானும் எனது நண்பனும் லண்டனிலிருந்து இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தோம் அவனுடைய cousin வீட்டுக்கு, அன்று அவனுடைய cousin வீட்டில் கார்த்திகை தீபம் கொண்டாடுவதாதக சொல்லி இருந்தான், அத்னால் jeans போடறதுக்கு பதிலா சுடிதார் போட்டுட்டு போலாம்னு ஒரு சுடிதார் போட்டுட்டு அதுக்கு shoe போட்டா நல்லா இருக்காதுன்னு செருப்பே போட்டுகிட்டேன் அந்த கடுங்குளிறுலும்.

நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்தவுடன் இறங்குவதற்க்கு தயாராக இருந்தோம். நிறைய பேர் இறங்க வேண்டி இருந்ததால் வரிசையாக வாசலில் நின்று கொண்டு இருந்தோம். எனக்கு முன் எனது நண்பன் நின்று கொண்டு இருந்தான், எனக்கு பின் ஒரு வெள்ளைக்கார தாத்தா நின்று கொண்டு இருந்தார்.

ஒரு சில இரயில் நிலையங்களில், platform- க்கும் train-க்கும் கொஞ்சம் இடைவெளி இருக்கும் அதனால் அங்கு "mind the gap" என்று எச்சரிக்கை கொடுத்திட்டே இருப்பாங்க, அதோட இறங்கற இடத்தில எல்லாம் எழுதி வச்சிருப்பாங்க. இந்த வசனம் அங்க பிரபலமான ஒன்று வேற, "mind the gap" என்று t-shirt ல எல்லாம் எழுதி வச்சு விப்பாங்கன்னா பாத்துக்கோங்க எவ்வளவு பிரபலம்னு

இரயில் நின்றவுடன் எல்லாரும் வேகமா இறங்கிக் கொண்டு இருந்தார்கள், நான் மட்டும் "mind the gap" எச்சரிக்கைய மனசில வச்சிட்டே கொஞ்சம் மெதுவாக இறங்கினேன். இதுவே நம்ம ஊர்-ல இருந்தா இந்த மாதிரி எச்சரிக்கை எல்லாம் காதுல கூட விழுந்து இருக்குமான்னு தெரியல :). விதிகளை மதிக்க தேவையில்லைங்கற எண்ணம் இல்ல, ஒரு confidence-னு கூட வச்சுக்கலாம்.

நான் மெதுவா இறங்கிட்டு இருந்தேன், எனக்கு பின்னாடி இருந்த வெள்ளைக்கார தாத்தா வேகமா இறங்கிறதுக்கு வந்தார், அவருக்கு அவங்க ஊர் தான அப்படீங்கற confidence :) ஆனா அவர் என்னொட செருப்ப மிதிச்சிட்டார் வேகமா வந்ததால. என்னோட ஒரு செருப்பு மட்டும் platform-க்கும் train-க்கும் இடையில் உள்ள இடைவெளியில் விழுந்திடுச்சு :(. செருப்பு இல்லாம வெறும் காலோட அந்த குளிர்ல தரைல நிக்கறது எவ்வளவு கஷ்டம்னு அனுபவிச்சா தான் தெரியும்.

இதுவே நம்ம ஊரா இருந்தா train போனவுடன் platform-ல நம்மலே இறங்கி எடுத்திடலாம், இந்த ஊர்ல அதுக்கும் பயமா இருந்தது, platform-ல இறங்கினா எங்க பிடிச்சு உள்ள வச்சிருவாங்கலோன்னு. நம்ம ஊர் jail-யே சினிமால தான் பாத்து இருக்கேன், இந்த ஊர் jail-a நேர்ல பாக்க வேண்டி வந்திட கூடாது இல்லையா, அப்படியே வந்தாலும் நம்ம ஊர் jail-a பாக்காம இந்த ஊர் jail-க்கு போக கூடாதுன்னு platform-ல இறங்கி நம்மலே இறங்கி எடுக்க வேண்ட்டாம்னு முடிவு பண்ணி எனது நண்பன் செருப்ப எடுக்கறதுக்கு யாராவது guard இருக்காங்கலான்னு பாக்க போனான், நான் train போன உடனே அந்த இடத்திலேயே நின்னுட்டு இருந்தேன்.

நல்ல வேலையா அங்க ஒரு guard இருந்தார், அவர் எனது நண்பனோட வந்து வெளிய எட்டி பார்த்தார், நான் கொஞ்ச தூரத்தில நின்னுட்டு இருந்தேன், அவர் இருந்த இடத்தில இருந்தே என்ன பார்த்து ஒரு சின்ன சிரிப்பு சிரிச்சிட்டு உள்ள போய்ட்டார், சரி ஏதாவது நீளமான stick எடுத்திட்டு வர போய்ட்டாருன்னு நினைச்சேன். உள்ள போன ரெண்டு பேரையும் ஒரு 5 நிமிஷ்த்துக்கு வெளிய காணோம், என்னடா இது வம்பா போச்சு இப்படீயே இந்த குளிர்ல எவ்வளவு நேரம் நிக்கறதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன், கொஞ்ச நேரம் ஆனவுடன் வேற ஒரு guard எனது நண்பனுடன் ஒரு நீளமான stick எடுத்திட்டு வந்தார். அப்பாடான்னு அப்ப தான் நிம்மதியா இருந்தது. அவர் வந்து செருப்ப எடுத்து கொடுத்திட்டு போய்ட்டார்.

அதன் பிறகு என் நண்பன் சொன்னத கேட்டு குளிரெல்லாம் மறந்து சிரிச்சிட்டே போனோம். அப்படி என்ன சொன்னான் தெரியுமா, முதல் வந்த guard கிட்ட போய் இப்படி சொல்லி இருக்கான் "my friend's footwear has fallen down in the platform"-னு. அவருக்கு footwear-na என்னனு புரியல, அதனால அவர் வெளிய வந்து எட்டி பாத்திட்டு எனது நண்பன் கிட்ட சொன்ன வார்த்தை "she didnt fall down, she is standing on the platform only"-னு. அவர் என்னோட பெயரை footwear-னு நெனச்சுகிட்டாரான்னு தெரியல. அப்புறம் எனது நண்பன் வேற ஒரு guard-க்கு தெளிவா விளக்கி கூட்டிட்டி வந்து இருக்கான் :)

எனது நண்பனோட cousin வீட்டுக்கு போய் கார்த்திகை தீபம் special சாப்பாட வடை பாயாசத்தோட ஒரு புடி புடிச்சேன். லண்டன் வந்து வடை பாயாசத்தோட எத்தனை பேருக்கு சாப்பாடு கெடைக்கும். இங்க வந்து நம்ம ஊர் full meals சாப்பிடறது தனி சுகம் தான் போங்க !!!