Wednesday 24 January 2007

நிராகரிக்கப்படுதலின் வலி

நான் இன்று காலை அலுவலுகத்திற்கு பேருந்தில் வந்து கொண்டிருக்கும் போது, என் அருகில் ஒரு பெண் செல்பேசியில் யாருடனோ பேசிக் கொண்டே வந்தார். சிறிது நேரம் அந்த உரையாடலை கவனிக்காமல் வந்து கொண்டிருந்தேன், ஆனால் அந்த பெண்ணின் விசும்பல் சத்தம் அந்த உரையாடலை கவனிக்க வைத்தது. அந்த பெண் தனது நண்பனை பற்றி அவனுடைய அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்பெண் பேசிய வார்த்தைகள் பின்வருமாறு

"இப்பெல்லாம் என்னை அவன் வெறுக்க ஆரம்பித்து விட்டான், நான் செல்பேசியில் அழைத்தால், அழைப்பை துண்டித்து விடுகிறான், அப்படியே அழைப்பை எடுத்தாலும் சரியாக என்னுடன் பேசுவதில்லை. முன்பெல்லாம் அதிக நேரம் என்னுடன் பேசுவான், எல்லா விஷயங்களையும் பற்றி இரவு வெகு நேரம் வரை பேசிக் கொண்டிருப்போம், ஆனால் திடீரென்று அவனுக்கு என்ன ஆச்சுன்னு புரியல, கொஞ்ச நாளாவே என்னை புறக்கணிக்க ஆரம்பித்து விட்டான், நானும் அவனுக்கு எதோ பிரச்சனை அதனால் தான் அப்படி இருக்கிறான், சிறிது காலத்தில் சரியாகி விடும் என்று நினைத்தேன், ஆனால் நேற்று என்னுடைய பிறந்த நாள் என்று தெரிந்தும் கூட எனக்கு வாழ்த்துச் சொல்லவில்லை. நானும் இரவு வெகு நேரம் வரை அவனுடைய தொலைபேசி அழைப்பு வரும் என்று காத்திருந்தேன், ஆனால் கடைசி வரை அவன் அழைக்கவேயில்லை. நேற்று இரவு முழுவதும் அழுது கொண்டேயிருந்தேன். அப்படி பெரிதாக எங்களுக்குள் சண்டை எதுவும் நடக்கவில்லை, அப்படியே இருந்தாலும் கோவம் இன்னைக்கு வரும், நாளைக்கு வரும், ஆனால் என் பிறந்த நாள் வருடத்தில் ஒரு முறை தானே வருகிறது, அன்று கூட அவன் என்னை இப்படி அழ வைக்கனுமா. நீங்களாவது அவனிடம் அவனுக்கு என்ன பிரச்சனை என்று பேசுங்க"

இதே உரையாடலை நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு முன்பு நான் கேட்டிருந்தால், இந்த அளவுக்கு என்னை பாதித்திருக்காது என்று நினைக்கிறேன். முன்பெல்லாம் யாராவது இப்படி பேசுவதை நான் கேட்க நேர்ந்திருந்தால், அவங்களுக்கு கொஞ்சம் அறிவுரை சொல்லிட்டு வந்திருப்பேன், நீங்க ஏன் இப்படி அவங்களுக்காக அழுதிட்டு இருக்கீங்கன்னு, முடிஞ்சா கொஞ்சம் திட்டிட்டு வந்திருப்பேன். ஆனால் இப்பெல்லாம் அதன் வலியை புரிந்துகொள்ள முடிகிறது. காதல் கற்றுக் கொடுத்த பாடங்களில் இதுவும் ஒன்று. அன்புக்குரியவர்களால் நிராகரிக்கப்பட்டால் எந்த அளவுக்கு வலிக்கிறதோ, அதை விட பல மடங்கு நம்மால் திருப்பி அன்பு செலுத்தவும் முடிகிறது. எல்லாரும் ஒரு முறையாவது யாராவது ஒருவரால் குறைந்த பட்சம் ஒரு சில மணித்துளிகளாவது நிராகரிக்கப்பட்டிருப்பார்கள் என்று நான் கருதுகிறேன். அதே நேரத்தில் நம்மாலும் யாரோ ஒருவர் எதாவது ஒரு சில சமயங்களில் நிராகரிக்கப்பட்டிருப்பார்கள் என்பதையும் நினைத்து பார்க்க முடிகிறது.

அப்பெண் நிராகரிக்கபட்ட மன வருத்ததில் இருந்தால் கூட, அவனுக்கு ஏதாவது பிரச்சனையா இருக்கும் என்று நினைத்து தான் அதிகம் வருத்தப்பட்ட மாதிரி தெரிந்தது. இந்த பெண்மையின் பெருமையை என்ன என்று சொல்வது !!!!

5 comments:

Shruthi said...

அனுபவங்கள் வேறுபடுகின்றன, ஆனால் வலி ஒன்று தான்.

As you told, time has a very good healing power.

வருகைக்கு நன்றி Abiramam.

சுந்தர் / Sundar said...

//"நிராகரிக்கப்படுதலின் வலி" //

கொடியது ..கொடியது .. என்பேன்
இதை விட கொடியது ..வேறு இல்லை என்பேன் !

நவீன் ப்ரகாஷ் said...

"பேசிக்கொண்டாவது
இருந்திருக்கலாம்
பேசிக்கொடுத்த
தொல்லையைவிட
உன் நினைவுகளின்
தொல்லை
அதிகமாக
இருக்கிறது"

:)))

Appaavi said...

//எல்லாரும் ஒரு முறையாவது யாராவது ஒருவரால் குறைந்த பட்சம் ஒரு சில மணித்துளிகளாவது நிராகரிக்கப்பட்டிருப்பார்கள் என்று நான் கருதுகிறேன்//


நிராகரிப்பை நிராகரிக்க கற்றுக்கொண்டால் பிரச்சனை இல்லை என்பது பலமுறை நிராகரிக்கப்பட்ட இந்த அப்பாவியின் கருத்து.

நிலாரசிகன் said...

//"அப்பெண் நிராகரிக்கபட்ட மன வருத்ததில் இருந்தால் கூட, அவனுக்கு ஏதாவது பிரச்சனையா இருக்கும் என்று நினைத்து தான் அதிகம் வருத்தப்பட்ட மாதிரி தெரிந்தது." //

நிராகரிப்பு இருபாலருக்குமே நிகழ்கிறது. நிராகரிப்பின் வலியால் ஒரு க(வி)தை எழுதி இருக்கிறேன் "ஒரு புல்லாங்குழல் ஊமையானது".