Tuesday 23 January 2007

தொலைத்த உறவுகளில் ஒன்று!!!!!

நம் வாழ்க்கையில் எத்தனையோ பேர் வந்து போவதுண்டு, ஆனால் அனைவருமே நம் வாழ்க்கையின் அங்கமாகிவிடுவது இல்லை. சில பேர் விளிம்பில் இருந்து எட்டி பார்த்துவிட்டு சென்று விடுவர், சிலர் கொஞ்ச காலம் நினைவில் இருப்பர், வெகு சிலர் மட்டுமே நம் வாழ்க்கையில் நீங்கா இடம் பிடித்து சென்று விடுவர். நான் இப்போது சொல்லவிருக்கும் இந்த உறவை மேற்சொன்ன எந்த வகுப்பில் சேர்ப்பது என்று எனக்குத் தெரியவில்லை.

நான் பள்ளியில் படித்துக் கொண்டு இருக்கும் போது, எனது பெரியம்மா மகனும் எங்கள் வீட்டிலிருந்து கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தார். நான், என் அண்ணன், என் அக்கா மூவருமே அவருடன் பேசுவதற்க்கே பயப்படுவோம். அவர் எங்கள் வீட்டில் தங்கி இருந்த காலங்களில், "அண்ணா, அம்மா உங்கள சாப்பிட கூப்பிடறாங்க....." என்ற வார்த்தைகள் மட்டுமே நான் அவருடன் பேசி இருப்பேன் என்று நினைக்கிறேன்.

அவரை பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவரது குடும்பத்தை பற்றியும் கொஞ்சம் சொல்ல வேன்டும். எனது பெரியம்மாவும் பெரியப்பாவும் சென்னையில் வசித்து வந்தார்கள், பெண் குழந்தைக்கு ஆசைப்பட்டே நான்கு மகன்களை பெற்றெடுத்த பெரிய குடும்பம். அவர்கள் வீட்டில் பெண் இல்லை என்பதாலோ என்னவோ என் சகோதரி மீதும் என் மீதும் மிகவும் பாசமாக இருப்பார்கள் அந்த நான்கு அண்ணன்களும். இதில் நான் இன்னும் கொஞ்சம் special கடைக்குட்டி என்பதால். ஆனால் இரண்டாவது அண்ணன் மட்டும் எங்களுடன் சரியா பேச மாட்டார். அதற்க்கும் ஒரு காரனம் உண்டு, அவர் கொஞ்சம் சரியாக படிக்கமாட்டார் என்பதால் அவர் வீட்டில் அவர் மீது கொஞ்சம் பாரபட்சம் காட்டுகிறார்கள் என்று அவருக்கு நினைப்பு, அது ஓரளவுக்கு உண்மையும் கூட. அதனால் தான் என்னவோ எங்களுடன் கலகலப்பாக பேச மாட்டார்.

அவர் பத்தாம் வகுப்பில் இரண்டுமுறை தோல்வியடைந்து வீட்டில் மனமொடிந்து இருந்தார். அப்போது தான் என் அப்பா அவரை எங்கள் வீட்டிற்க்கு அழைந்து வந்தார். என் அப்பாவை பற்றி சொல்வதற்க்கு தனியா ஒரு பதிவே போடலாம். பெண் குழந்தைகளுக்கு அப்பா தான் முதன் முதல் பரீட்ச்சைமயமாகும் ஆண் என்று சொல்லலாம். அதனால் தான் என்னவோ எல்லாரை போலவும் என் அப்பாவும் எனக்கு ஒரு Hero போன்று தான் நினைக்க தோன்றும். அவரை குறித்து நான் இன்னும் ஆச்சரியப்படும் விஷயங்கள் நிறைய உண்டு. அதில் ஒன்று அவருக்கு படிப்பதிலும் மற்றும் படிக்கவைப்பதிலும் உள்ள ஆர்வம். அந்த ஆர்வத்தினால் பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்த என் cousin brother-யை எங்க வீட்டுக்கு கூட்டி வந்திருந்தார்.

என் அப்பா அவருக்கு கொடுத்த ஊக்கத்திற்க்கும் உற்ச்சாகத்திற்க்கும் அளவே இல்லைனு சொல்லலாம். அவரோடு இரவும் பகலும் கூடவேயிருந்து படிக்க வைப்பார். flask-ல் தேனீர் போட்டு வைத்துக்கொள்வார் தூக்கம் வராமல் இருக்க. சில சமயம் பொறுமையாக சொல்லி கொடுப்பார், சில சமயம் கோவம் வந்து அடித்து விடுவார். அவருக்கே அந்த நிலைமை என்றால், எங்க மூவருடைய நிலைமை உங்களுக்கே புரிஞ்சிருக்கும். என் அக்காவும், என் அண்ணனும் படிப்பிற்க்காக என் அப்பாவிடம் வாங்கிய அடிகளை கணக்கிட முடியாது. இதில் நான் கொஞ்சம் விதி விலக்கு, படிக்காவிட்டாலும் கடைசி இரவிலாவது படித்து மதிப்பெண் வாங்கி விடுவதால் அடியிலிருந்து தப்பித்து விடுவேன் :).

சரி, என் cousin brother கதைக்கு வருவோம், அவர் பத்தாம் வகுப்பில் 70% மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்தது, அனைவருக்கு மட்டுமில்லாமல் அவருக்கே ஆச்சரியமான உண்மை. என் அப்பா அடைந்த பெருமைக்கு அளவே இல்லை போங்க. அவர் எங்களோட வீட்டில் இருந்தே தொடர்ந்து படிக்க வேண்டும் என்று விரும்பியதால், எங்க ஊரிலேயே டிப்ளமோ சேர்ந்து படிப்பை தொடர்ந்தார்.

அவர் சென்னையில் இருந்து வந்ததாலோ என்னவோ அவருக்கு எங்க ஊரில் நிறைய fans, பந்தாவாக உடை உடுத்துவார், நல்ல shoe போடுவார். இதற்க்கெல்லாம் மயங்கி அவருக்கு காதல் வலை விரித்த பெண்களும் உண்டு :). ஆனால் அவர் படித்து தன் சகோதரர்களை விட விரைவில் முன்னேற வேண்டும் என்று வெறியோடு இருந்தார். ஆனாலும் காதலை எவ்வளவு காலம் தான் மறைத்து வைக்க முடியும். என் அக்காவின் தோழி ஒருவர் எங்கள் வீட்டிற்க்கு அடிக்கடி வருவார் என் அக்காவுடன் சேர்ந்து படிக்க என்று சொல்லிக்கொண்டு. நான் அப்போது சின்ன பெண் என்பதால் படிக்க தான் வருகிறார்கள் என்று நானும் நம்பிய காலம் அது. அவர்களுக்குள் காதல் இருந்ததே அவர்களுக்கு காதல் தூதுவாக இருந்த என் அக்கா பிற்காலத்தில் சொல்லி தான் எனக்கு தெரியும் :).

எனக்கு என் அப்பா Hero போல என்றால் என் cousin brother-க்கோ கடவுள் போல, இன்று வரை அப்படித்தான் எல்லாரிடமும் சொல்லுவார், என் அப்பாவுக்கு இவர் தான் வலதுகை போன்று. என் அப்பாவுக்கு ஒரு பழக்கம் உண்டு, வீட்டிலுள்ள பொருட்களை எல்லாம் வாரத்திற்க்கு ஒரு முறை மாற்றி வைத்துக்கொண்டே இருப்பார். என் அம்மா என் அப்பாவுக்கு வைத்திருக்கும் பேரே "துக்ளக்" என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் அவர் எத்தனை தடவை மாற்றிக்கொண்டே இருப்பார் என்று. அதற்கு ஒரு நல்ல காரணமும் சொல்லுவார், அதாவது வீடு சுத்தமாகும், அதோடு மாற்றம் இருந்தால் மனசுக்கும் நல்லா இருக்கும்னு சொல்லுவார். அதுவும் சரி தானே!!!......பொருட்களை மாற்றி வைப்பதற்க்கு பெரிதும் உதவியாக இருப்பது என் cousin brother தான். அதோடு என் அப்பாவுக்கு விபத்து நடந்து மூன்று மாதங்கள் படுக்கையிலிருந்த போதும் அவர் தான் முழுவதும் பார்த்துக் கொண்டார்.

என் அக்கா காதல் தூதுவாக இருந்ததாலோ என்னவோ என் அக்காவுடனும் நன்றாக பேச ஆரம்பித்து விட்டார் என் cousin brother. ஆனால் எனக்கும் அவருக்கும் எப்போதும் ஒரு பெரிய இடைவெளி இருந்துகொண்டே இருந்தது. அவர் படிப்பும் நல்ல படியாகவே போய்க்கொண்டு இருந்தது. அவர் படிப்பு முடிந்து சென்னை போனவுடன் அவர் காதலும் தொடர்பில்லாமல் போய்விட்டது :( . இதற்கு ஒரு வகையில் என் அப்பாவின் சதியும் காரணம் என்று கேள்விபட்டேன், ஆனால் என் அப்பாவை Hero-வாக மட்டுமே பார்த்த எனக்கு காதலுக்கு மட்டும் வில்லனாக கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை, அதனாலேயே ஏன் பிரிந்தார்கள் என்ற ஆராய்ச்சியை தொடரவில்லை.

அவர் சென்னையில் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார், அதோடு வெளிநாடு செல்வதற்க்கும் முயற்சி செய்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் தான் நான் சென்னைக்கு engineering படிக்க வந்தேன். நான் கல்லூரியின் விடுதியிலேயே தங்கி படிக்க ஆரம்பித்தேன், எனது cousin brothers வாரத்தில் குறைந்தது இரு முறையாவது என்னை பர்க்க வந்து விடுவார்கள், அதோடு நானும் வாரக் கடைசியில் பெரியம்மா வீட்டிற்க்கு சென்று விடுவேன். எங்க வீட்டில் முன்பு தங்கி இருந்த அண்ணனும் என் கூட நன்றாக பேச ஆரம்பித்திருந்தார். அவருக்கு எனது கல்லூரி தோழியினர் வைத்த பேரே "பாச மலர்" என்றால் அவர் எந்த அளவுக்கு என் மேல் பிரியமுடன் இருந்திருப்பார் என்று பாருங்கள்....

அவரின் அளவு கடந்த அன்பு எந்த அளவுக்கு நன்றாக இருந்ததோ அதை விட தொல்லையாகவும் இருந்தது என்பதே உண்மை. அவருடைய அன்பு possessiveness-ஆக மாறி இருந்தது. வேற அண்ணன்களுடன் அதிக நேரம் நான் பேசி விட்டால் அவருக்கு கோவம் வந்து விடும், அதே மாதிரி கல்லூரியிலும் தோழிகளிடம் வெளியில் செல்லக் கூடாது என்று சொல்ல ஆரம்பித்தார். கல்லூரி வாழ்க்கையை முழுவதும் சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் என்று இருந்த எனக்கோ இது மாதிரியான கட்டுப்பாடுகளை உடைத்து எரிந்து வருவது கடினமான ஒன்றாக அப்போது தோன்றவில்லை. எனது அம்மா அப்பா எனக்கு கொடுத்திருந்த சுதந்திரமும் அதற்கு உதவியாக இருந்தது. இதனால் எனக்கும் அவருக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.....

நான் கல்லூரி வாழ்க்கையின் கடைசி ஆண்டில் இருந்தேன், எல்லாருக்கும் campus interview-வில் வேலை கிடைத்து விட்டது எனக்கு மட்டும் கிடைக்கவில்லை. என்னோட ஆங்கில அறிவை பற்றி முந்தைய பதிவுகளை படித்து இருந்தால் உங்களுக்கு தெளிவாக புரியும் எனக்கு ஏன் campus interview-வில் வேலை கிடைக்கவில்லை என்று :). அந்த காலம் மிகவும் கொடுமையான காலம், அதை எப்படி கடந்தேன் என்பது இன்று வரை எனக்கு ஆச்சரியம் தான். campus interview-வில் வேலை கிடைக்காததினால் வேறு ஒரு சின்ன நிறுவனத்தில் சேர போகிறேன், அங்கு தான் என் அருமை வாழ்க்கை துணையை சந்திக்க போகிறேன் என்று அப்போதே யாராவது சொல்லி இருந்தால் அழுது அழுது இரவுகளை கழித்திருக்க தேவையில்லை......

நான் கல்லூரி முடித்து வெளியில் வந்தவுடன் என் cousin brother வெளிநாடு சென்றுவிட்டார். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது, அப்பாடா அவர் தொல்லை இனி இல்லை என்று. ஆனால் என் கவனம் முழுவதும் வேலை வாங்க வேண்டும் என்பதிலேயே இருந்தது....எப்படியோ திக்கு முக்காடி எனக்கும் ஒரு சின்ன நிறுவனத்தில் வேலை கொடுத்து விட்டார்கள் :). அன்று தான் என் வாழ்க்கையின் பொன்னான நாட்களில் ஒன்று.... எல்லாருக்கும் அப்படி தான் என்று நினைக்கிறேன்.

காதல் என்னை மட்டும் விட்டு வைத்ததா என்ன, வாழ்க்கையில் உண்மையான சந்தோஷம், கஷ்டம் இரண்டையும் அனுபவிக்க விரும்பினால் காதல் பிரதான வழிகளில் ஒன்று :) அதற்கு பிறகு Hero-ஆக இருந்த என் அப்பா என் காதலுக்கு வில்லனாக மாறி இருந்த காலம். வேதனைகளுக்கு நடுவில் நான் சிரிக்க கற்றுக் கொண்ட காலம் என்றும் சொல்லலாம். அந்த சமயத்தில் தான் என் வெளிநாட்டு cousin brother-க்கு திருமணம் நிச்சயமாகியிருந்தது. அவர் திருமணத்திற்க்காக சென்னை வந்திருந்தார். மணப்பெண்ணுக்கு புடவையிலிருந்து மோதிரம் வரை என்னை தான் தேர்ந்தெடுக்கச் சொன்னார். என் காதல் பற்றி அவருக்கு தெரிந்தால் என்ன எல்லாம் நடக்கும் என்று உள்ளுக்குள் ஒரு பயம் இருந்தாலும், அவரே காதலித்தவர் தானே, என் காதலை மட்டும் எதிர்க்கவா போகிறார் என்று ஒரு சின்ன நம்பிக்கையும் இருந்தது. என் அம்மாவோ எப்படா அவரிடம் சொல்ல சந்தர்ப்பம் கிடைக்கும் என்று காத்துக்கொண்டிருந்தார். காதலின் சக்தி தெரியாமல், அவர் ஏதோ என்னை திருத்திவிடுவார் என்று என் அம்மாவின் நம்பிக்கை.

அதற்குள் நானே சொல்லலாம் என்றால், கல்யாண நேரத்தில் அவரை வருத்தப்படுத்த வேண்டாம் என்றும் கல்யாணம் முடிந்து சொல்லிவிடலாம் என்றும் நினைத்திருந்தேன். திருமணமும் நல்லபடியா முடிந்தது, அதற்கு பிறகு அவர் மனைவியுடன் கூடவே இருந்ததால் சொல்ல சந்தர்ப்பம் கிடைக்கவே இல்லை. நானும் வேலைக்கு திரும்பி விட்டேன். என் அம்மாவும் கல்யாணம் முடிந்து சொல்லலாம் என்று நினைத்திருப்பார் போல, எனக்கு கிடைக்காத சந்தர்ப்பம் என் அம்மாவுக்கு எப்படியோ கிடைத்துவிட்டது. நான் அடுத்த முறை அவரிடம் தொலைபேசியில் பேசும் போதே தெரிந்துவிட்டது அவர் என் அம்மா அப்பாவை விட பெரிய வில்லனாக மாறியிருந்தது :(

நான் அவரை நேரில் சந்தித்து எவ்வளவோ பேசியும் அவர் சமாதானம் ஆகவேயில்லை, பதிலுக்கு நான் தான் அவர் பேசிய பேச்சுக்களை கேட்க சக்தியில்லாதவளாய் திரும்பினேன். அன்று அவர் என் கூட பேசுவதை நிறுத்தியது தான், இன்றோடு கிட்டதட்ட 5 வருடங்கள் ஆகி விட்டது நான் அவருடன் பேசி. இடையில் அவரை சந்திக்கும் போதெல்லாம் சமாதானத்திற்கு முயற்சி செய்தும் முடியவில்லை. சில காலங்களுக்குப் பிறகு சமாதானம் செய்வதையும் நிறுத்திவிட்டேன். என் அம்மாவும் அப்பாவும் சமாதானம் ஆகியும் கூட அவர் சமாதானம் ஆகவில்லை என்பது எனக்கு இன்று வரை அதிசயமாக உள்ளது. அவர் என் மீது அன்பு செலுத்திய நாட்களில் நானே அந்த அன்பு இந்த அளவுக்கு வேன்டாம் என்று நினைத்தது உண்டு, ஆனால் அது சாதாரணமாக நடந்திருந்தால் வருத்தமாக இருக்காது, நம் மேல் உள்ள வெறுப்பு மற்றும் கோவத்தினால் விலகி செல்வது என்பது யாராக இருந்தாலும் கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இது சரி செய்ய முடியாத உறவாக மாறி விட்டது என்பதே கசப்பான உண்மை!!!!!!!!!!!!

4 comments:

Unknown said...

அனுபவங்களை அருமையா எழுதியிருக்கீங்க.. வலையுலகத்திற்கு வருக.. வருக...

Shruthi said...

நன்றி தேவ்

சுந்தர் / Sundar said...

தொலைந்த உறவுகள் ... சிக்கிரமே கிடைக்க எனது வாழ்த்துக்கள்
முன் சொன்னது போலவே பதிவு அருமையாக அமைந்துள்ளது .

Shruthi said...

நன்றி சுந்தர்.
தொலைந்து போன உறவுகளுக்காக வருத்தப்படுவதை விட, இருக்கிற உறவுகளை தொலைக்காமல் இருந்தால் சரி, காதலையும் சேர்த்து.